துபாய்: மூன்றாவது டெஸ்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. "ஹாட்ரிக்' தோல்வியால் இங்கிலாந்து அணியின் "நம்பர்-1' இடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. துபாயில், பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 99, இங்கிலாந்து 141 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 365 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து திணறல்: நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டிராஸ் (26) முதலில் சரிவைத் துவங்கி வைத்தார். அடுத்து வந்த டிராட், பீட்டர்சன் இருவரும் தலா 18 ரன்கள் எடுத்து, சயீத் அஜ்மல் சுழலில் பெவிலியன் திரும்பினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெஸ்டர் குக் (49 ரன்கள், 187 பந்துகள்) அரைசதம் வாய்ப்பை இழந்தார்.
பவுலர்கள் அபாரம்:
"டாப் ஆர்டரை' சுழற் பந்து வீச்சாளர்கள், கவனித்துக் கொள்ள, "மிடில் ஆர்டரை' உமர் குல் வேகத்தில் சிதைத்தார். இவரது பவுலிங்கில் முதலில் பெல் (10) சிக்கினார். அடுத்து மார்கன் 31 ரன்னுக்கு அவுட்டானார். தொடர்ந்து அசத்திய உமர் குல், பிராட்டையும்(18) விட்டு வைக்கவில்லை.
பிரையர் ஆறுதல்: கடைசிநேரத்தில் சற்று அதிரடியாக ரன்கள் சேர்த்தார் பிரையர். "டெயிலெண்டர்கள்' சுவான் (1), ஆண்டர்சன் (9) விரைவில் அவுட்டாகினர். முடிவில் பனேசர் (8) அப்துல் ரெஹ்மானிடம் சிக்க, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பிரையர் (49) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் சயீத் அஜ்மல், உமர் குல் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
முடிவில் 3-0 என, டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற பாகிஸ்தான் அணி, கோப்பை கைப்பற்றி அசத்தியது.
100 ஆண்டுகளில் 2வது முறை : டெஸ்ட் வரலாற்றின் ஒரு அணி, ஒரு இன்னிங்சில் 100க்கும் குறைவான ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, பின்பு வெற்றி பெறுவது, கடந்த 100 ஆண்டுகளில் இது இரண்டாவது முறை. இதற்கு முன் 1907ல் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76 ரன்னுக்கு சுருண்டு, பின் 53 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றது.
* இதுபோல, 100 ரன்களுக்கு அவுட்டாகி, அந்த அணி வெற்றிபெறுவது, இதுவரை 12 முறை நடந்துள்ளது.
சுழலில் அதிக விக்கெட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், இம்முறை தான் அதிகபட்சமாக 48 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இதற்கு முன் 1987-88 தொடரில், பாகிஸ்தான் அணி 45 விக்கெட் வீழ்த்தியது தான் அதிகமாக இருந்தது.
முதலிடத்துக்கு ஆபத்து: இத்தொடரில் துவக்கத்தில் இங்கிலாந்து அணி 125 புள்ளிகளுடன், சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் "நம்பர்-1' இடத்தில் இருந்தது. இப்போது முதலிடத்துக்கு ஆபத்து இல்லை என்றாலும், 7 புள்ளிகளை இழந்துள்ளது (118). ஒரு புள்ளி குறைவாக பெற்ற தென் ஆப்ரிக்கா (117) இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் இந்தியா (111), ஆஸ்திரேலிய (111) அணிகளும், பாகிஸ்தான் (108) 5வது இடத்திலும் உள்ளன.
* வரும் மார்ச்சில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 3-0 என தென் ஆப்ரிக்கா வென்றால் முதலிடத்தை பிடிக்கும். அதேநேரம் வரும் ஏப்., 1ம் தேதி முதலிடத்தில் இருக்கும் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.,) வழங்கப்படும் ரூ. 86 லட்சம் பரிசு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.