ரிசானாவின் மரணத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு!

ரிசானா நஃபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த அப்பாவி இலங்கைப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் புறக்கணித்து வந்தார்கள் என்று அது குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கு குறித்து மேன்முறையீடு செய்வதற்கான நிதியை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவில்லை என்று அந்த ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குனரான பஷில் பெர்ணாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொலை செய்ததாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரை நேரடியாகச் சந்தித்து அவர்களிடம் ரிசானா நஃபீக் சார்பில் மன்னிப்பு பெற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்தக் குடும்பத்தோடு நேரடியாகப் பேசி அவர்களை சமரசம் செய்திருந்தால் மாத்திரமே ரிசானாவை காப்பாற்றியிருக்க முடியும் என்ற நிலை இருந்த வேளையில், இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் எல்லாம் சவுதிக்கு சும்மா வந்து தங்கிவிட்டுப் போனார்களே ஒழிய, இறந்த குழந்தையின் பெற்றோர்களுடன் அவர்கள் நேரடியாக பேசவில்லை என்றும் பஷில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்வதேச மட்டத்தில் இந்த விடயத்தில் உருவாகியிருந்த ஒரு சாதகமான நிலையையும் இலங்கை அரசாங்கம் பயன்படுத்தத்தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், ரிசானாவின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கம் தன்னால் ஆன அனைத்தையும் செய்தது என்று கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now