”புலிகளின் கொலைக்களம்” - ‘எல்.ரி.ரி.ஈ.யினரின் இறுதிக்கட்ட கொடுமைகள்’ பாதுகாப்பு அமைச்சு DVD வெளியிட்டது!




வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட நடவடிக்கைகளின் போது புலிகளால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை நடவடிக்கைகளை வெளிக்கொணரும் நோக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களுடன் கூடிய டி.வி.டி.யொன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. 

‘எல்.ரி.ரி.ஈ.யினரின் இறுதிக்கட்ட கொடுமைகள்’ எனும் தலைப்பில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இந்த டி.வி.டிகளை தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல வெளியிட்டுவைத்தார்.

குறித்த டிவிடி தொடர்பிலும் வெளியீட்டு நிகழ்வு தொடர்பிலும் அரச தரப்பு ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டிருக்கின்றது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர்மடம் சென் மேரிஸ் தேவாலயத்தில் தஞ்ச மடைந்திருந்த 600 சிறுவர், சிறுமியர்களை எல்.ரி.ரி.ஈ.யினர் பலவந்த மாகப் பிடித்துச்செல்ல மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தேவாலயத்தின் மீது நடத்திய கொடிய தாக்குதல் சம்பவம் பற்றியும், இச்சம்பவம் குறித்து அத்தேவாலயத்தின் பிரதம அருட்தந்தை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்களும் இந்த டி.வி.டியிலுள்ள வீடியோ காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்துவாழும் சில தமிழர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களால் இலங்கை அரசாங்கத்துக்கும், முப்படையினருக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், எல்.ரி.ரி.ஈ.யினரின் கொடிய செயல்களை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டும் நோக்கிலுமே இந்த வீடியோ காட்சி தயாரிக்கப்பட்டிருப்பதாக லக்ஷ்மன் ஹூலுகல்ல குறிப்பிட்டார்.

சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் இலங்கை தொடர்பான வீடியோ காட்சியில் தோன்றிய உருவங்கள் மற்றும் கருத்துத் தெரிவித்த நபர்கள் குறித்த எந்தவிதமான சரியான தவல்களும் இல்லை. வெறுமனே நிழல்கள் மாத்திரமே காண்பிக்கப்பட்டன.

ஆனால், பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ காட்சியில் தோன்றும் நபர்கள் உண்மையில் கஷ்டங்களை நேரில் கண்டவர்களும், அனுபவித்தவர்களும். அவர்களின் பெயர்கள், வாழும் இடம் என்பனவும் இவ்வீடியோ காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தேவையாயின் நேரடியாகச் சென்று அவர்களிடம் உண்மை நிலைமையைக் கேட்டறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோக் காட்சியடங்கிய டி.வி.டியை இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் வழங்கவிருப்பதுடன், சர்வதேச ரீதியில் நடைபெறும் மாநாடுகளில் இலங்கை சார்பில் கலந்துகொள்ளும் பிரதிகளூடாக வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக லக்ஷ்மன் ஹூலுகல்ல சுட்டிக்காட்டினார்.

வலைஞர் மடம் சென்மேரிஸ் தேவாலயத்தில் எல்.ரி.ரி.ஈ.யினர் மேற்கொண்ட கொடிய தாக்குதல்கள் மற்றும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் காயமடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களைக் கொண்ட பஸ்வண்டிகளை எல்.ரி.ரி.யினர் குண்டுவைத்துத் தகர்த்த சம்பவம் ஆகியவற்றை நேரடியாகக் கண்டவர்களின் சாட்சியங்கள் இந்த டி.வி.டியிலுள்ள வீடியோ காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமது தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த சுமார் 600 சிறுவர், சிறுமியர்களைப் பலவந்தமாகப் பிடித்துசெல்வதற்கு எல்.ரி.ரி.ஈ.யினர் முயற்சித்தனர். இதனைத் தடுக்க முயற்சித்தபோதும் ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் நுழைந்து சிறுவர், சிறுமியரைத் தாக்கி சிலரை எல்.ரி.ரி.ஈ.யினர் பலவந்தமாக இழுத்துச் சென்றதாகவும் இந்த டி.வி.டியிலுள்ள வீடியோ காட்சியில் தோன்றிய வலைஞர்மடம் சென்மேரிஸ் தேவாலயத்தின் பிரதம அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார். என்று அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now