பொதுமக்களின் பார்வையைத் தமது பக்கம் இழுப்பதற்காகச் சில தமிழ் இணையத்தளங்கள் ஆபாசமான படங்களையும், பொய் யான வதந்தி பரப்பும் செய்தி களையும் வெளியிட்டு வருகின்றன. இவற்றின் மூலமாகத் தமது தளத்தின் மீது மக்கள் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டுப் பின்னர் நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் செய்திகளையும், சொந்தத் தாய் நாட்டிற்கே அபகீர்த்தியைத் தேடித்தரும் விதத்திலும் பொய்யான கற்பனையுடன் கூடிய செய்திகளை வெளியிட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
இந்த ஈனச் செயலுக்காக இவர்கள் ஒருசில உள்ளூர் ஊடகவியலாளர்களையும், ஓய்வு பெற்றுள்ள ஊடகவியலாளர்கள் சிலரையும் பாவித்து வருவதாகவும் இதற்காக இவர்களுக்கு சன்மானங்களை தாராளமாக வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இணையத்தளங்கள் சிலவற்றுக்கு இவ்வாறு பொய்யான கற்பனைச் செய்திகளைச் சிருஷ்டித்து வழங்கி வந்த ஓய்வுபெற்ற ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் சன்மானம் போதாமையால் ஏற்பட்ட பிரச்சினையால் அவர்களை விட்டு வெளியேறி அவர்கள் நடத்தும் ஈனச் செயல்களை விலாவாரியாக வெளியிட்டுள்ளார்.
ஆபாசமான செய்திகளையும், பெண்கள் மீதான வன்முறைகளையும் தாராளமாக மிகைப்படுத்தியும், நடக்காத ஒரு விடயத்தை நடந்தது போலவும் எழுதுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் இந்த முன்னாள் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நாட்டின் நற்பெயருக்கும், சில தனிப்பட்டவர்களின் வாழ்விற்குக் களங்கத்தையும் ஏற்படுத்துவதிலும் இவர்கள் குறியாக இருப்பதாகவும், இவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகள் தாராளமாகவே கிடைத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
