
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க
இராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக
ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து
விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர்
ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார். இதனிடையே
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும்
போராட்டங்களில் நேற்று இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும்
நங்காஹர் மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க-ஆப்கானிய இராணுவத் தளத்தை
போராட்டக்காரர்கள் தாக்கிய போது, ஆப்கானிய இராணுவ உடையில் இருந்த ஒருவரால்
இந்த இரண்டு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்தப் படைத்தளத்தின் மீது தாக்குதலை
நடத்துமாறு உள்ளுர் பள்ளிவாசல் ஒன்று அழைப்பு விடுத்தது என்று பிபிசியின்
செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும்
நேற்று கொல்லப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏழு
மாகாணங்களில் குரான் எரிப்பு தொடர்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும்
நிலையில், அப்பகுதிகளில் இதுவரை குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர்.