புற்றுநோய்ச் சிகிச்சையின் பின்னர் இந்தியாவிற்குத் திரும்பினார் யுவ்ராஜ் சிங்

புற்றுநோய்க்கான சிகிச்சைகளை முடித்துக்கொண்டு இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் பொஸ்டனில் சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டிருந்த அவர், பின்னர் லண்டனில் சில நாட்கள் தங்கியிருந்தார்.

கடந்த 3 மாதங்களாக வெளிநாடுகளில் தங்கியிருந்து சிகிச்சைகளை முடித்துக்கொண்ட அவர், ரசிகர்கள் புடைசூழ இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தை இன்று காலை வந்தடைந்தார். அவரது தாயார் ஷப்னம் சிங் அங்கு அவரை வரவேற்றார்.

யுவ்ராஜ் சிங்கின் வருகையின் பின்னர் கருத்துத் தெரிவித்த அவரது தந்தை யோக்ராஜ் சிங், அனைவரது ஆதரவிற்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகத் தெரிவித்தார். கடவுளுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகத் தெரிவித்த அவர், தனது மகனுக்காக பிரார்த்தனை செய்ததன் காரணமாக தனது மகன் வெற்றியாளனாக மீண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

தனது மகன் மீது பெருமை கொள்வதாகத் தெரிவித்த அவர், தனது மகனைத் தான் அதிகமாக நேசிப்பதாகவும் தெரிவித்தார்.

தனது மகனை வரவேற்க விமாநிலையத்திற்கு சென்றிருக்காமை குறித்துக் கேட்கப்பட்டமைக்கு, தனது மகனை பொது இடத்தில் வைத்துச் சந்திக்க விரும்பவில்லை எனவும், தானும் கடவுளும், யுவ்ராஜ் சிங்கும் மட்டும் காணப்படும் ஓர் இடத்தில் தான் தனது மகனைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

யுவ்ராஜ் சிங்கின் வருகையை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை வரவேற்று அவரது ரசிகர்களும், கிரிக்கெட்டின் ரசிகர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now