தெற்கு
அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 80 ஆக
உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன
தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் 50 விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இவ் வருடத்தில்
30 வாகன விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தெற்கு அதிவேக வாகன விபத்துக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே
அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
கடந்த வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதியே தெற்கு அதிவேக நெடுஞ்சாலை
திறக்கப்பட்டது. குறித்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 24 மணித்தியாலத்துக்குள்
முதலாவது வாகன விபத்து இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளைக்
கடைப்பிடிக்காமல் வாகனம் செலுத்திய 900 பேருக்கு எதிராக இதுவரை வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 362 பேருக்கு எதிராக இவ்வருடத்திலேயே
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த வருடத்தில் இடம்பெற்ற வாகன
விபத்துக்களை இவ்வருட வாகன விபத்துக்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில்
இவ்வருடம் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளமையைக் காண முடிகிறது. அத்தோடு
இந்த அதிவேக நெடுஞ்சாலையில் அண்மையில் பயணிகள் பஸ் சேவையும்
ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.