பாதுகாப்பு கவலைகள் தொடர்பில் பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சி இடைநிறுத்தம்


H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ்


பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் H5N1 வைரஸ் கிருமியின் செயற்கை வகை ஒன்றை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், அந்த செயற்கை வைரஸினால் உலகின் பாதுகாப்புக்கு குந்தகம் வரலாம் என அஞ்சி தமது ஆராய்ச்சிகளை இடைநிறுத்த உடன்பட்டுள்ளனர்.

இந்த வகைக் கிருமியை எவ்வாறு உருவாக்குவதற்கான சரியான வழிமுறையை போன வருடம் அவர்கள் கண்டறிந்திருந்தனர்.
வியப்புக்குரிய அதேநேரம் கவலையளிக்கக்கூடிய சில கண்டுபிடிப்புகளையும் அவர்கள் செய்திருந்தனர்.

நெதர்லாந்தில் உள்ள எராஸ்மஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மடிசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமியை செயற்கையாக உருவாக்கும் வழியொன்றைக் கண்டறிந்து, அப்படி உருவாக்கப்பட்ட அக்கிருமிகள்பறவையிடம் இருந்து பாலூட்டியிடம் என்றில்லாமல் ஒரு பாலூட்டியிடம் இருந்து இன்னொரு பாலூட்டிக்கு எவ்வாறு பரவுகிறது என்பதை ferrets என்று சொல்லப்படுகின்ற அணில் போன்ற பாலூட்டி விலங்குகளை வைத்து ஆராய்ந்துள்ளனர்.

பாதுகாப்பு கவலைகள்

அவ்வாறு கண்டறிந்த விஷயங்களை சென்ற வருடக் கடைசியில் அவர்கள் அறிவித்திருந்தனர் . அவர்களது ஆராய்ச்சிகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பில் உடனடியாகவே கவலைகள் வெளியிடப்பட்டிருந்தன.
ஆராய்ச்சியாளர்கள் எவ்வகையில் தாம் வைரஸ் கிருமிகளை உருவாக்கினார்கள் என்பதை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும், வெளியேசொன்னால் அதனைக் காப்பியடித்து பயங்கரவாதிகளும் செயற்கையாக வைரஸ்களை உருவாக்கி உயிரி ஆயுதமாக பயன்படுத்த முடியும் என இந்த ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்கிய அமெரிக்க அரசாங்கமேகூட வலியுறுத்தியிருந்தது.

இந்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் ஆபத்து வருமா வராதா என்பதை மேலும் கலந்தாலோசித்து ஆராய்ந்து ஒரு தீர்மானத்துக்கு வரும் வரை ஒரு இரண்டு மாத காலத்துக்கு இவ்வாராய்ச்சிகளை இடைநிறுத்தி வைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.

புதிய கண்டுபிடிப்புகள்

ஆராய்ச்சிக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட H5N1 வைரஸ் வகையானது, நாம் இதற்கு முன் நினைத்திருந்ததைவிட மிகச் சுலபமாகவே ஒரு பாலூட்டியிடம் இருந்து இன்னொரு பாலூட்டிக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உலக அளவில் பார்க்கையில் விலங்குகளிடமிருந்து இக்கிருமி மனிதர்களுக்குப் பரவியது என்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகத்தான்.
ஆனால் அவ்வாறு அது விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவும்போது அந்த வைரஸினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவ்வகையாக கிருமித் தொற்று ஏற்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் இறக்க நேரிடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பான கவலைகள் பற்றி விவாதிப்பதற்காக சர்வதேச கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஏற்பாடு செய்துவருகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now