குறைந்த செலவில் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறலாம் - அரசாங்கம் அறிவிப்பு



வீதி விபத்துக்களை இல்லாதொழிக்கும் நோக்கோடு இலங்கை போக்குவரத்துச் சபையினால் சிறந்த சாரதிகளை உருவாக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி பயிற்சிப் பாடசாலைகளில் குறைந்த செலவில் சாரதி பயிற்சியினை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தனியார் பயிற்சி பாடசாலைகளில் பெருந்தொகையான பணம் அறவிடப்படுவதால் பயிற்சிக்கென செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தோடு அநேகமான இடங்களில் சிறந்த பயிற்சிகள் அவர்களுக்குக் கிடைக்கப்பெறுவதில்லை. இதனைக் கருத்திற்கொண்டே இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி பயிற்சிப் பாடசாலைகளின் ஊடாக 17 வயதைக் கடந்த சிறந்த தேக ஆரோக்கியமுள்ள எவரும் இந்தப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ளலாம். 
 
இப்பயிற்சியின்போது இலகுரக வாகனங்களுக்காக 6 ஆயிரத்து 500 ரூபாவும் பார ஊர்திகளுக்காக 9 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகிறது. இதைவிட பலமடங்கு அதிகமான தொகையினை தனியார் சாரதி பயிற்சி பாடசாலைகளில் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது நாட்டின் பல பாகங்களில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 10 சாரதி பயிற்சிப் பாடசாலைகள் உள்ளன. அவற்றை 12 ஆக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தினூடாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு மேலதிக வருமானத்தினை பெற்றுக்கொள்ள முடிவதுடன் சிறந்த பயிற்சியுடன்கூடிய சாரதிகளையும் உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now