சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்ஷி - பார்சிலோனா மோதல்

செல்ஷி மற்றும் பென்பிக்கா கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் செல்ஷி கழகம் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. பென்பிக்காவின் இறுதி நேர கடுமையான சவாலை முறியடித்தே செல்ஷி கழகம் அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

போட்டியின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய செல்ஷி கழகம், 21ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி உதையொன்றைக் கோலாக்கியது. முதலாவது கோலை செல்ஷி கழகம் சார்பாக ஃபிராங்க் லம்பார்ட் போட்டார்.

அதன் பின்னர் போட்டியின் 40ஆவது நிமிடத்தில் பென்பிக்கா கழகத்தின் அணித்தலைவர் மக்ஸி பெரைய்ரா சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். போட்டியின் அரைவாசி நேர இடைவேளையின் போது செல்ஷி கழகம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் காணப்பட்டதோடு எதிரணி 10 பேர்களுடன் விளையாட வேண்டி ஏற்பட்டமையால் செல்ஷி கழகம் இலகுவான வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இரண்டாவது பாதியில் விட்டுக்கொடுக்காமல் ஆடிய பென்பிக்கா கழகம் 85ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டு போட்டியை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.

பிரான்சிஸ்கோ ஜேவியர் கார்சியா அந்தக் கோலை பென்பிக்கா கழகம் சார்பாக போட்டார். எனினும் சுதாகரித்து ஆடிய செல்ஷி கழகம் 90ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் போட்டு போட்டி 2-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது.

செல்ஷி கழகம் சார்பாக இரண்டாவது கோலை மத்திய கள வீரர் ரோல் மெய்ரீலெஸ் போட்டார்.

நேற்றைய போட்டியில் பெற்றுக் கொண்ட வெற்றியை அடுத்து செல்ஷி கழகம் அரையிறுதிப்போட்டியில் பார்சிலோனா அணியைச் சந்திக்கவுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now