இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் தொழிலில் பெண்கள்!

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்த சூழ்நிலையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் அடுத்தக்கட்டமாக இப்போது இந்தப் பெண்களின் சமூக ரீதியான வகிபங்கு பலவழிகளிலும் மாற்றமடைந்து வருகின்றது.

யுத்த காலத்தில் கணவன்மாரை இழந்தவர்கள், கணவன்மாரால் கைவிடப்பட்டவர்கள் என பெரும் எண்ணிக்கையிலான பெண்களே இன்று குடும்பச் சுமைகளைத் தாங்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
\
இந்த நிர்ப்பந்தம் அவர்களை ஆண்களுக்கு நிகரான வாழ்க்கை நிலையை எதிர்கொள்ள வேண்டிய சவாலை அளித்திருக்கிறது. அதுவே ஆண்களுக்கே உரித்தான கடினமான தொழில்களையும் கூட செய்துதான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலையை அந்தப் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

போதுமான தொழில் வாய்ப்புகள் கிடைக்காதிருக்கின்ற இந்தப் பிரதேசங்களில் இதுவரை ஆண்கள் மட்டுமே ஈடுபட்டுவந்த கண்ணிவெடி அகற்றும் தொழிலில் சாதாரண குடும்பப் பெண்களும் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஆண்களுக்கு நிகராக, ஆபத்துமிக்க கண்ணிவெடி அகற்றும் தொழிலில் தாங்கள் ஈடுபடுகின்ற போதிலும், சமூகத்தில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று கண்ணிவெடி அகற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள பெண்கள் பலரும் கூறுகின்றனர்.

அதிகாலை ஐந்து மணிக்கு வேலைக்கு புறப்பட்டுச் சென்று மாலை 3 மணிக்கு வீடு திரும்புகின்ற இந்தப் பெண்கள் பிரயாணம், குழந்தைகள் பராமரிப்பு, வீட்டுப் பணிகள் போன்ற அடிப்படை விடயங்களில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

அதுமட்டுமன்றி பாதுகாப்பற்ற ஒரு சூழலையும் எதிர்கொள்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறே கண்ணிவெடி அகற்றல் போன்ற நிரந்தரமற்ற தொழில்களைக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு வாழ்க்கையை ஓட்ட முடியுமோ என்பதும் இவர்களின் கவலை.

இலங்கையில் சுமார் 3600 பேர் கண்ணிவெடி அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. (BBC)
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now