பலஸ்தீனுக்கு ஒரு முகம் இஸ்ரேலுக்கு இன்னொரு முகம் :முஸ்லிம்களை அரசாங்கம் ஏமாற்றுகிறது: ஐ.தே. கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்


பலஸ்தீனத்திற்கு ஒரு முகத்தையும் இஸ்ரேலுக்கு இன்னொரு முகத்தையும் காட்டும் அரசாங்கம் முஸ்லிம்களை ஏமாற்றுவதாக மேல் மாகாண சபை ஐ.தே. கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில்,

பலஸ்தீன மக்களின் உரிமைகளை மதிப்பதாக கூறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். ஆனால் மறுபுறம் காட்டு மிராண்டித்தனமாக இஸ்ரேலியர்களுக்கு தேசிய தினத்தை கொண்டாடுவதற்கு இலங்கையில் வசதிகளை செய்து கொடுத்துள்ளதோடு, தூதரகமொன்றை கொழும்பில் ஆரம்பிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்படும் ஜனாதிபதி மறுபுறம் பலஸ்தீன ஜனாதிபதி மஹமூட் அப்பாஸை இலங்கைக்கு அழைத்து செங்கம்பள வரவேற்பு வழங்கி, இரு தரப்பு உடன்படிக்கைகளிலும் கையெழுத்திடுகின்றார்.ஆனால் இரண்டு வாரங்களில் இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்கிறார்.அரசாங்கம் பலஸ்தீனம் தொடர்பில் இரட்டை வேடம் போடுகிறது.

இந்த இரட்டை வேடத்தை கண்டிக்கின்றோம். முஸ்லிம்களை ஏமாற்ற பலஸ்தீன ஆதரவும் அமெக்காவை சந்தோசப்படுத்த இலங்கையில் இஸ்ரேலிய தூதரகத்திற்கும் அனுமதியளிக்கப்படுகின்றது.இச் செயற்பாடானது எதிர்காலத்தில் நாட்டில் மிகப் பயங்கரமான விளைவுகளை தோற்றுவிக்கும். இஸ்ரேலியர்கள் காலடி எடுத்து வைத்த நாடுகளில் எல்லாம் இனங்களிடையே குரோதங்களை விதைத்து இனக்கலவரங்களை உருவாக்குவார்கள்.

விசேடமாக இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக அபாய சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் ஆபத்து எம் மத்தியில் தோன்றியுள்ளது.

ஆனால் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை பாதுகாத்துக்கொள்வதற்காக மௌனிகளாக உள்ளனர்.எனவே பலஸ்தீன மக்களின் தார்மீகப் போராட்டத்தை ஆதரிக்கும் இலங்கை மக்கள் இஸ்ரேலிய தூதுரகம் இங்கையில் ஏற்படுத்துவதற்கு எதிராக போர்க்கொடி தூக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now