வடக்கு புத்தர் சிலை விவகாரம் ஐ.நா. செல்கிறது!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங்களிலும் தனியார் காணிகளிலும் அத்துமீறி பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு எதிராக ஐ.நா. சபையிடம் முறைப்பாடொன்றைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் இந்து மத அமைப்புக்களும் தமிழ் புத்திஜீவிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அத்துமீறி அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையீடு செய்வதற்கான முன் முயற்சிகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக நம்பகரமாக அறிய முடிகின்றது. இந்த அப்பட்டமான மத உரிமை மீறல்கள் குறித்துப் பல்வேறு மட்டங்களிலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு நீதியான பதில் கிட்டாத காரணத்தினால் இவ்வாறு ஐ.நாவிடம் நீதி கேட்பதெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கமைய ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை இந்துமத அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் தயார் செய்து வருகின்றனர் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டனிலுள்ள பிரபலமான சட்டத்தரணிகள் ஊடாக ஐ.நா.விடம் இந்த முறைப்பாட்டைச் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது, வடக்கு கிழக்கில் ஆலய காணிகளில் படையினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் ஆகியன உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக இந்து மாமன்ற வட்டாரங்கள் மேலும் கூறின.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தின்போது இலங்கை அரசிடம் ஐ.நா. கேள்வி எழுப்பக்கூடிய வகையில் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now