பேரின கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் இன்னும் நீண்ட காலத்துக்கு கிழக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக வாழ வேண்டி வரும்!

கிழக்கு மாகாண சபை தேர்தலில் சிறீ. முஸ்லிம் காங்கிரசும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதே இன்றைய சூழலில் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு நன்மையானது என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மெட்ரோ மிரருக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; “கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவத்தையும் சக்தியையும் உலகறியச் செய்ய முடியும் என கூறினோம்.
ஆனால் இதனை ஏற்காத மு. கா. ஐ தே க.வுடனும் ஏனைய முஸ்லிம் கட்சிகள் அரசுடனும் இணைந்து போட்டியிட்டன. நாமும் அரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். பல மரண அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்தோம்.

இதன் காரணமாக மாகாண சபை உறுப்பினர்கள் நலன் பெற்றது தவிர வேறு எதையும் பெரிதாக கிழக்கில் எவராலும் சாதிக்க முடியவில்லை. எமது கட்சியும் கறிவேப்பிலையானது தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.

தற்போது அனைத்து முஸ்லிம் கட்சிகளும் மத்தியில் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதால் அனைவரும் ஒன்றிணைந்து பெரும்பான்மை கட்சிகளை தவிர்த்து பொது சின்னத்தில் போட்டியிடக்கூடிய நல்ல சூழல் உள்ளதை பயன்படுத்த முன் வர வேண்டும். அவ்வாறில்லாமல் உப்புச்சப்பற்ற ஒரு முதலமைச்சர் பதவிக்கோ அல்லது அமைச்சு பதவிக்கோ ஆசைப்பட்டு பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் இன்னும் பல காலத்துக்கு கிழக்கு முஸ்லிம்களும் முஸ்லிம் கட்சிகளும் அடிமைகளாக வாழ வேண்டி வரும். மு.கா. தலைவரும் கண்ணைத் திறந்து கொண்டே குழியல் விழுந்துள்ளோம் என தொடர்ந்தும் புலம்பித்திரிய வேண்டி வரும் என்பதை எச்சரிக்கையாக கூறுகிறோம்.

கிழக்கு தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும் இரண்டு அமைச்சுக்களே முஸ்லிம்களுக்கு கிடைக்கும். அது யாருக்கென்பதில் முஸ்லிம் கட்சிகள் இழுபட்டு சமூகத்தின் பெயர்தான் சந்தி சிரிக்கும். அதேபோல் முதலமைச்சர் பதவி ஒரு முஸ்லிமுக்கு வழங்கப்பட்டால் ஒரே ஒரு முஸ்லிமுக்கே அமைச்சர் பதவி கிடைக்கும். இவ்விரண்டும் யாருக்கு என்பதில் மிகப்பெரிய யுத்தமே நடக்கும் சாத்தியக்கூறுகளே உள்ளன.

ஆகவே சமூக நலன் கருதி முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட முன் வர வேண்டும். அல்லது கிழக்கின் ஆட்சியை எப்படியாவது பிடிக்கத்தான் வேண்டும் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முன்வர வேண்டும். இதுவல்லாத எந்த முடிவும் கிழக்கு மக்களுக்கு விமோசனத்தை தராது என்பதை உலமா கட்சி சொல்லி வைக்கிறது” என முபாறக் மௌலவி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now