
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ்ப்பாண பணிமனையில் இன்று திங்கள் ´வடக்கில் துளிர்விடும் பௌத்தம்´ என்ற தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்தஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை,
வடக்கில் தற்போது புத்தர் சிலையினுடைய ஆக்கிரமிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதற்காக நாம் ஏற்கனவே கண்டனங்களைத் தெரிவித்திருந்தோம் அதன்பிரகாரம் தற்போது அது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோயில்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அவற்றினை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அத்துடன் யுத்தத்தினால் அழிந்து போன மற்றும் புனரமைப்புச் செய்ய வேண்டிய கோயில்கள் ஏராளம் வடக்கில் உள்ளன. அதனைப் புனரமைத்து புதுப் பொலிவு பெறுவதற்கு வேண்டிய எந்த முயற்சிகளையும் அரசு எடுக்காமல் தமது கடவுளரின் சிலைகளை தான்தோன்றித்தனமாக நிறுவி வருகின்றது. இது எமது சமயத்தின் உயர்வுக்கு பாதகமாக அமைகின்றது.
இதற்கு அண்மையில் திருக்கேதீஸ்வரத்தில் புத்தர் சிலை ஒன்று தான்தோன்றித்தனமாக அரசு நிறுவியதனைக் கூறலாம். இதனை நாம் வன்மையாகக் கண்டித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
அத்துடன் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் முன்னர் தனியாருக்கு சொந்தமானதாக இருந்தது. ஆனால் அது தற்போது அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் இங்கு கிடைக்கின்ற வருமானங்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கூட எமக்குத் தெரியாது.
இதற்கென தனிநிர்வாகம் கிடையாது அதனால் அரசின் எதிர்கால திட்டங்கள் என்ன என்றும் புரியவில்லை. காலப்போக்கில் புத்தர் சிலையைக் கூட அங்கு அவர்கள் நிறுவலாம்.
அத்துடன் வடக்கில் பல கோயில்கள் நீதிமன்றில் வழக்கில் உள்ளன. இதனால் சமய ரீதியிலான வழக்கு நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் நடத்தப்படுவதனை விரும்பவில்லை. அதனால் இனிவரும் காலங்களில் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் உள்ள மத்தியஸ்தர் சபையின் ஊடாக கோயில்களில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் அகில இந்து மாமன்றத்தின் செயலாளர் நீலகண்டன், அகில இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறுதிருமுருகன், நல்லை ஆதீன முதல்வர், நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் ஆலய குருக்கள், மற்றும் இந்து மத அமைப்புக்கள் நிர்வாக சபைத் தலைவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.