IPL ஐ தொடர்ந்து ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்

கடந்த ஆண்டு நடாத்தப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கடந்தாண்டு இடம்பெறவிருந்த இத்தொடர் இந்திய கிரிக்கெட் சபையின் போதிய ஆதரவின்மை மற்றும் தொடரை நடாத்தவிருந்த தனியார் அமைப்புடன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் எழுந்த சர்ச்சைகள் ஆகியன காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.

இந்தியாவின் இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் போன்று வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய டுவென்டி டுவென்டி தொடரொன்றை நடாத்த இலங்கைக் கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது. இதன்படி சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சமர்செட் பொழுதுபோக்கு நிறுவனத்துடன் இது தொடர்பான ஒப்பந்தத்தை இலங்கைக் கிரிக்கெட் சபை மேற்கொண்டிருந்தது.

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து அது தொடர்பாக ஆராய்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சரால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 5 வருடகால ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட்டு புதிய திருத்தப்பட்ட ஒப்பந்தமொன்றே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படியே எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இத்தொடர் நடாத்தப்பட ஏற்பாடாகியுள்ளது.

மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட 7 அணிகளைக் கொண்டு இத்தொடர் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு பஸ்னாகிர பியர்ஸ், மத்திய மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு கந்துரட்ட கைற்ஸ், கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நாகேந்திர நாகாஸ், தென் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு றுகுண றைனோஸ், வடக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு உத்தர ஒரிசைன்ஸ், ஊவா மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு ஊவா யுனிக்கோர்ண்ஸ் மற்றும் வட மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு வயம்ப வோல்வ்ஸ் ஆகிய அணிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now