முஸ்லிம்
மக்களை இனப்பிரச்சினை தீர்வில் உள்ளடக்க வேண்டும். அவர்களது கோரிக்கையில்
நியாயம் உள்ளது என இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா
ஏற்றுக்கொண்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்
தெரிவித்துள்ளன.
இவ்விடயத்தை
ஜனாதிபதியினதும் உரியவர்களினதும் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர்
மேலும் கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.
கிருஷ்ணாவுக்கும் மு.கா. பிரதிநிதிகளுக்குமிடையில் தாஜ் சமுத்ரா ஹோட்டலில்
இட்ம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
எஸ்.எம் கிருஷ்ணா 13
வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அதிக
ஆர்வம் கொண்டுள்ளார். அத்துடன், இனப்பிரச்சினை தீர்வின்போது முஸ்லிம்களது
தனித்துவம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழ்ந்துவரும் பகுதிகளில் தமிழ், முஸ்லிம் உறவுகளை அடிப்படையாக வைத்தே தீர்வு அமையவேண்டும். இந்த அடிப்படையிலேயே முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்று மு.கா. அவரிடம் கூறியுள்ளது.
இந்தியாவின்
உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கும்
நியாயமான பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் இதன்போது
வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி, பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், கல்முனை பிரதிமேயர் நிசாம் காரியப்பர், சட்டத்தரணி பாயிஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தாவும் கலந்து கொண்டார்.
