ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளமொன்றல் இஸ்லாமிய புனித நூலான
குர்ஆன் எரிக்கப்பட்டமை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காபூல் நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள்
இடம்பெற்றன. சுமார் 2000-2500 பேர் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர்.
தலைநகர் காபூலுக்கு வடக்கிலுள்ள பக்ரம் இப்படைத்தளத்தில் குர்ஆன் மற்றும்
இஸ்லாமிய மத பிரசுரங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையைச் சேர்ந்த சிப்பாய்கள் இருவரால்
குப்பை அழிக்கப்படும் இடமொன்றுக்கு கொண்டு செல்வத்றகாக குப்பைகளுடன்
சேர்த்து இந்நூல்களையும் ட்ரக் ஒன்றில் நேற்றிரவு
ஏற்றிச்செல்லப்பட்டதாகவும் பின்னர் அங்கிருந்த ஆப்கான் ஊழியர்கள் இருவர்
சமய நூல்கள் இருப்பதைக் கண்டு அழிப்பு நடவடிக்கையை நிறுத்தியதாகவும்
மேற்படி தளம் அமைந்துள்ள பர்வான் மாகாண சபைத் தலைவர் அஹமட் ஸக்கி ஸஹீட்
தெரிவித்துள்ளார்.
30 புனித குர்ஆன் பிரதிகள் மற்றும் சமய நூல்கள் அழிக்கப்படாமல் அமெரிக்க
அதிகாரிகளால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அஹமட் ஸக்கி கூறினார்.
அந்நூல்களில் சில எரிந்திருந்தன, சில நூல்கள் எரிந்திருக்கவில்லை எனவும்
மேற்படி நூல்கள் அம்முகாமில் முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களால்
பயன்படுத்தப்பட்டவை எனவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானிலுள்ள
சர்வதேச துருப்புகளின் தளபதியான அமெரிக்க ஜெனரல் ஜோன் அலன் கூறியுள்ளார்.
குர் ஆன் உட்பட பெரும் எண்ணிக்கையான இஸ்லாமிய மத நூல்கள் முறையற்றவிதமாக
அழிக்கப்பட்டதாக தமக்கு நேற்றிரவு அறிக்கை கிடைத்தாக அவர் தெரிவித்தார்.
'இது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன்
மீண்டும் இவ்வாறு நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது (குர் ஆன் எரிப்பு) எந்த வகையிலும் வேண்டுமென்று
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல என்று நான் உத்தரவாதப்படுத்துகிறேன்,
உறுதியளிக்கிறேன்' என அவர் கூறினார்.



.jpg)

