ஹிலாரியை சந்திக்க பீரிஸ் கடும் முயற்சி

news
 ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இறுக்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரனை அவசரமாகச் சந்திப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

 
நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், அரசியல்தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான இலங்கையின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடருக்கு முன்னர் மார்ச்மாத தொடக்கத்தில் வாசிங்டன் வருமாறு  வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கடந்த ஜனவரி மாத இறுதியில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
 
அந்தக் கடிதத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பதில் கூட அனுப்பவில்லை.
 
ஹிலாரியின் அழைப்பைப் புறக்கணித்து விட்டு, ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்து ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக ஆதரவு திரட்டினார் பீரிஸ். தற்போது ஜெனிவாவில் இலங்கைக்கு நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளதை அடுத்து ஹிலாரி கிளின்ரனை அவசரமாகச் சந்திக்க அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்காக அவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஊடாக விருப்பம் வெளியிட்டு தகவல் அனுப்பியுள்ளார்.
 
இதையடுத்து, சந்திப்புக்குப் பொருத்தமான நாளைக் குறிப்பது தொடர்பாக கொழும்பிலும், வாசிங்டனிலும் உள்ள இராஜதந்திரிகள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
 
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரனின் அழைப்பை பீரிஸ் முன்னரே ஏற்றுக் கொண்டு வாசிங்டன் சென்றிருந்தால், அமெரிக்காவின் தீர்மானத்தை விலக்கிக் கொண்டிருக்கவோ, அல்லது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் கடுமையைக் குறைத்திருக்கவோ முடிந்திருக்கவோ வாய்ப்புகள் கிடைத்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now