கோட்டே,
ரஜமஹா விகாரையின் பெளத்த தேரர்கள் இருவர் கோரமான முறையில் கொலை
செய்யப்பட்டுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியை பொலிஸார்
நேற்று கைதுசெய்துள்ளனர்.
காணி தகராறே இக்கொலைகளுக்கு காரணமாகவிருந்துள்ளதென்ற உண்மை
அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்துக்கு காரணமான இன்னுமொரு பிரதான
சந்தேக நபர் மற்றும் கொலைகளுக் காக பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதம்
ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக
இறங்கியுள்ளனர்.
கோட்டே ரஜமஹா விகாரையைச் சேர்ந்த பிடிகல ஜினரத்ன தேரர் (80) மற்றும்
பொரலஸ்கமுவ குணரத்ன தேரர் (60) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு 9.30
மணியளவில் கூரிய ஆயுதமொன்றினால் வெட்டியும் குத்தியும் கோரமான முறையில்
கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இக் கொலையுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் அன்றைய
தினமே பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் பயணம்
செய்த மோட்டார் வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொலை செய்யப்பட்டிருக்கும் (80) வயதான ஜினரத்ன தேரரே கொலையாளிகளின்
இலக்காக இருந்துள்ளார். அவரின் அறைக்குள் அலறல் சத்தம் கேட்டதையடுத்து அதனை
பார்வையிடுவதற்காக அவ்விடத்திற்கு ஓடி வந்த குணரத்ன தேரரையும் கொலையாளிகள்
கொன்றிருப்பதாகவே ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கத்தி குத்துக்கு இலக்கானதையடுத்து ஜீனரத்ன தேரர் சம்பவம் இடம்பெற்ற
இடத்திலேயே உயிரிழந்ததுடன் குணரத்ன தேரர் களுபோவிலை வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.
பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடனேயே சூத்திரதாரிகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் தப்பிச் சென்ற கொலையாளிகள் தொடர்பாக தமக்கு பல
தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவை ரகசியமான முறையில்
பாதுகாக்கப்படுவதுடன் பொலிஸ் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து
வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
விசாரணைகளின் ஆரம்பத்தில் விகாரைக்கு அருகில் கட்டடப் பணிகளில்
ஈடுபட்டிருந்த நால்வரையே பொலிஸார் கைதுசெய்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.