பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்படவில்லை: கோட்டாபய

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் வெற்றி பெறுமெனத் தாம் நம்புவதாக  அரசாங்கத்திடம்  பல இராஜதந்திரிகள் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளனர் எனவும் ஆனால் வெவ்வேறு காரணங்களினால் இவற்றில் சில நாடுகள் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும்  பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

11,000 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதுடன், 4000 பேரை விடுவித்துள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கில் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கையின் நல்லிணக்க முயற்சி நவீன வரலாற்றில்  அதிசிறந்ததாக அமைந்தது எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் பற்றி அவர் பேசுகையில், 400 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இன்னமும் சுதந்திரமாக இருப்பதாகவும் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், எல்.ரி.ரி.ஈ. வானொலி தகவல்களை இடைமறித்துக் கேட்டபோது 2009ஆம் ஆண்டு ஜனவரியில் பிரபாகரன் சரணடைவதற்கு மறுத்தமை நிரூபணமானதாகவும்  கூறினார்.

இராணுவத்தினரிடம் பிரபாகரன் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கோட்டாபய ராஜபக்ஷ மறுத்து பேசினார்.

 'தமிழீழ விடுதலைப் புலிகள் மோதலில் தோல்வியடைந்துகொண்டிருந்தபோது ஆயுதக்கொள்வனவாளரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் சரணடையுமாறு கூறிய ஆலோசனையை  பிரபாகரன் மறுத்துள்ளார். பிரபாகரன் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அவர் உயிருடன் பிடிபடவில்லை' எனவும் கூறினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now