வீட்டுப் பணிப் பெண்ணாக தான் வேலை செய்த
வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் வெள்ளவத்தைப்
பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் கைகளை இரண்டையும் உயர்த்தி
அந்தப் பொலிஸ் நிலையத்தின் மேல் கூரைக் கம்பில் (பராலையில்) கட்டி வைத்து
குறித்த சிறுமி மீது வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரிகள் இருவர் கடுமையாகத்
தாக்கிய மனதை உருக்கும் சம்பவம் ஒன்று அம்பலத்துக்கு வந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து இது தொடர்பான சட்ட
வைத்திய அதிகாரியின் அறிக்கை ஒன்றினைப் பெறுவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர்,
கொழும்பு மேலதிக நீதிவான் மஹி விஜயவீர முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி தான் பணி செய்த
வீட்டிலிருந்து 190,000 ரூபா பெறுமதியான நகைகளையும் வேறு சில பொருட்களையும்
களவாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ்
நிலையத்துக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கு வைத்தே சிறுமி
இவ்வாறான கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 18 வயதைக் கூட அடையா இவர்
மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமியாவார்.


