மக்கள் எழுச்சியினால் தான் அரசாங்கத்தை மாற்ற முடியும்: மட்டக்களப்பில் ரணில்

மக்கள் எழுச்சியினால் தான் அரசாங்கத்தை மாற்ற முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்கப்பு மாவட்ட பிரதேச முக்கியஸ்த்தர்களுடனான சந்திப்பிபொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அரசரட்ணம் சசிதரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பிலேயே எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சியடைய வேண்டும். அப்போது தான் அரசாங்கத்தை மாற்ற முடியும். அரசாங்கத்தை மாற்றும் நேரம் தற்போது வந்துள்ளது. இதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியை கிழக்கு மாகாணத்தில் வளர்ப்பதற்கு இங்குள்ள ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்த்தர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அடி மட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற வேண்டும். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் அடையாளம் இல்லாமல் போய் விட்டது. ஒரு காலத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் முக்கியஸ்த்தர்கள் இருந்துள்ளனர். இதே போன்று தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலும் முக்கியஸ்த்தர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்துள்ளனர்.

எதிர்காலத்தில் கிராம மட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினை வளர்த்து அரசாங்கத்தை மாற்ற நாம் அணைவரும் அணி திரளவேண்டும்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றியடைய செய்ய வேண்டும். இதற்காக கட்சி கிளைகளை புனரமைத்து கட்சியை வளர்க்க வேண்டும். கிழக்கு மாகாண சபை தேர்தலை சந்திப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சி கிழக்கு மாகாண சபை கலைப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்லாது. எந்த தேர்தலையும் நாம் சந்திப்பதற்கு ஆயத்தமாகவுள்ளோம். வாக்களிப்பு நிலையங்கள் தோறும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பின்னர் கிராம ரீதியாக மற்றும் பிரதேச ரீதியாக கிளைகளை அமைக்க வேண்டும்" என்றார்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரட்ன, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.மாசிலாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now