இந்தியாவில்
ஆயுர்வேதம், யூனானி, சித்த வைத்தியம் மற்றும் ஹோமியோபதி வைத்தியத்
துறைகளில் பட்டப்படிப்பு, பட்டபின் படிப்பு மற்றும் கலாநிதி பட்டப்
படிப்புகளை புலமைப்பரிசில் அடிப்படையில் பெறுவதற்கு இலங்கை மாணவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இந்த மாணவர்களை தெரிவு செய்யும் பணியை இந்திய அரசாங்க அதிகாரிகள் இலங்கையின் உயர் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடியே மேற்கொள்வர். இந்தப் புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படும் ஒவ்வொருவருடைய கல்விச் செலவை முழுமையாகவும் இவர்கள் இந்தியாவில் கல்வி பயிலும் போது உணவு மற்றும் ஏனைய செலவுகளுக்கு மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகையையும் இந்திய அரசாங்கம் வழங்கும். அத்துடன் இலவச வைத்திய வசதிகளையும் இந்தியாவில் செய்து கொடுக்கப்படும்.
இதற்காக உயர்கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து- கற்கை நெறி தொடர்பான ஏனைய ஆவணங்களையும் உயர்கல்வி அமைச்சு, இலக்கம்18 வோட்ஸ் பிளேஸ், கொழும்பு 7 எனும் முகவரிக்கு 2012 மே 30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை உயர்கல்வி அமைச்சின் www.mohe.ac.lk இணையத்தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று உயர் கல்வி அமைச்சு அதிகாரி ஒருவர் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.

