ஐ.பி.எல்., இறுதிப்போட்டி சென்னையைவிட்டு நகர வாய்ப்பு?



சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த ஐ.பி.எல்., இறுதிப்போட்டி வேறு மாநில மைதானத்திற்கு மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி--20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடக்கின்றன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சென்னைக்கு, இம்முறை அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. துவக்கவிழா, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. துவக்க போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. வரும் 25ம் தேதி "பிளே-ஆப், அதைதொடர்ந்து 27ம்தேதி, இறுதிப்போட்டியும் சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை,சேப்பாக்கம் மைதானத்தில் 10 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்க்கும் வகையில் மூன்று "ஸ்டேண்டுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட மூன்று வி.ஐ.பி., "பாக்ஸ்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய "ஸ்டாண்டுகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சி.எம்.டி.ஏ.,) இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால், இந்த "ஸ்டேண்டுகளை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. 

மூன்று "ஸ்டேண்டுகள் பூட்டி கிடப்பதால், ரசிகர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில், "பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டியை காண்பதற்கு வெளிமாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்களும், ரசிகர்களும் சென்னை வருவார்கள் என தெரிகிறது. மூன்று "ஸ்டேண்டுகளை பயன்படுத்த முடியாததால் இட நெருக்கடி ஏற்படுவதுடன், ஐ.பி.எல்., அமைப்புக்கு வருமானமும் குறையவாய்ப்புள்ளது. சென்னை அணியும், அதிக தோல்விகளை சந்தித்து வருவதால், "பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஐ.பி.எல்., போட்டியை பொறுத்தவரை, வழக்கமாக உள்ளூர் அணி பங்குபெறும் போட்டியை காண மட்டுமே ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், சென்னையை அணியை தவிர்த்து மற்ற அணிகள் "பிளே-ஆப் மற்றும் இறுதிபோட்டியில் மோதினால் ரசிகர்கள் எண்ணிக்கையும் குறையவாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கியப்புள்ளியை, இறுதிப்போட்டி பரிசளிப்பு விழாவிற்கு அழைத்துவர எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்று, பல்வேறு கணக்குகளை போட்ட ஐ.பி.எல்., நிர்வாகம் இறுதிப்போட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்றலாமா என்று யோசித்து வருகிறது. சென்னைக்கு பதிலாக மும்பை அல்லது டில்லிக்கு இறுதிப்போட்டி மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து சென்னை சேப்பாக்கம் மைதான நிர்வாகிகளிடம் விசாரித்தபோது,""இறுதிப்போட்டி மைதானம் மாற வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால், வரும் 12ம்தேதி டில்லி--சென்னை அணிகளுக்கு இடையே, சென்னையில் நடக்கும் போட்டிக்கு பிறகே முடிவு தெரியும், என்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now