கொடுத்த கடன்களை மீளப்பெற திணறும் அரச வங்கிகள்

கடந்த 10 வருட காலத்தில் மக்கள் வங்கியினால் அறவிடப்பட முடியாத வாராக் கடன்களின் பெறுமதியும் இலங்கை வங்கியின் செயற்படாத கடன்களின் பெறுமதியும் 170 பில்லியன் ரூபா என நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரு ஆவணங்களின்படி, இலங்கை வங்கியின் செயற்படாத கடன்களின் பெறுமதி 161 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இலங்கை வங்கியின் கடன்மீட்பு மேலதிக முகாமையாளரினால் கையெழுத்திடப்பட்ட அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்க உயர் மட்டத்தினரின் ஆசிர்வாதத்துடன் கடன்களைப் பெறும் சில நபர்கள் கடன்களை திருப்பிச் செலுத்தாதுள்ளதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

'இது தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு நாம் வங்கிகளின் அதிகாரிகளை கோரினோம். இதன் மூலமே இவ்விபரங்களைப் பெற்றுக்கொண்டோம். அரசியல் செல்வாக்குள்ள நபர்கள் கடன்களை திருப்பிச் செலுத்தாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்' என அவர் தெரிவத்தார்.

இதேவேளை, மக்கள் வங்கி கடந்த 10 வருடகாலததில் 8.4 பில்லியன் ரூபாவை வாராக் கடனாக ஒதுக்கியுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

"சமுர்த்திப் பயனாளிகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 8.8 பில்லியன் ரூபாவை செலவிடுகிறது. இதேயளவான தொகை, மீளப்பெற முடியாத கடனாக ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலைமைக்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சாதாரண விவசாயி ஒருவர் தனது விவசாய நடவடிக்கைகளுக்காக 20,000 30,000 ரூபாவை கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதபோது  அவர்கள் வங்கி அதிகாரிகளினால்  இரக்கமின்றி வேட்டையாடப்படுகின்றனர். ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தப்பி விடுகிறார்கள்"  எனவும் அவர் தெரிவித்தார்.

100 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு  அரசாங்கத்தை அவர் கோரினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now