
காலி
மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த முஸ்லிம்
கடைகளுடைய பூட்டுக்களில் மனித மலம் பூசப்பட்டிருப்பதாகவும்,நாய்கள் படுகொலை
செய்யப்பட்டு அப்பகுதிகளில் வீசப்பட்டிருப்பதுடன், நாய் இரத்தமும்
அங்குள்ள கடைகள் மீது தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி
மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில்
சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை
மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிமிருந்த நிலையிலேயே
இந்த அசிங்கம் நிறைந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
இச்சம்பவங்களுக்கு
சிங்கள பேரினவாதிகள் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. தம்மை சிங்கள
தேசப்பற்றாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலரே இவ்வாறான பாதகச் செயல்களில்
ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
முஸ்லிம்
சமூகத்திற்கெதிராக காலியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இனவாதச்
செயற்பாடுகளை முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம
ஆசிரியருமான என்.எம். அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
இதுதொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.