இலங்கையின்
இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ற நோக்குடன் அரசாங்கத்துக்கும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து
முன்னெடுப்பதன் மூலமே அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான முன்னகர்வை
மேற்கொள்ள முடியுமென்பது இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்திருக்கும்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற எல்லை வரையறையின் கீழும் பேச்சுவார்த்தையை உள்ளடக்க முடியுமெனக் கூறியுள்ளார்.
அரசின் உத்தேச பாராளுமன்றத்
தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமிக்குமாறும் இல்லையேல் பேசுவதில்
அர்த்தமில்லையெனவும் அரசாங்கம் வலியுறுத்திவருகிறது இந்நிலையில்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்க வேண்டுமென்ற விடயத்தை
கிருஷ்ணா சூசகமாகச் சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பல சிறந்த முன்மொழிவுகளை
கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமுல்படுத்தப்பட்டால்
அது தேசிய நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்மாதிரியாகும் என்றும் அவர்
தெரிவத்துள்ளார்.
இதேவேளை தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்
சமூகத்தினரைப் புறம்தள்ளி செயல்படுவதற்கு எந்தவொரு தரப்பினருக்கும்
இடமளிக்க மாட்டோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவரை
சந்தித்து பேசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம்
தெரிவித்துள்ளார் என்று முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.