மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் குடும்பம் இலங்கைக்கு தப்பி வந்தது
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் மனைவியும் மகள்களும் இன்று கொழும்பை வந்தடைந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி பதவியிலிருந்து மொஹமட் நஷீட் ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னரும் அங்கு மொஹமட் நஷீட்டின் ஆதரவாளர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி நஷீட்டின் குடும்பத்தினர் பாதுகாப்பு தேடி இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'மொஹமட் நஷீட்டின் மனைவியும் இரு பிள்ளைகளும் இங்கு வந்தடைந்ததாகவும் அவர்கள் நேற்றுமாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி மூலம் உரையாடியதாகவும் பந்துலய ஜயசேகர ஏ.எவ்.பியிடம் கூறியுள்ளார்.
மொஹமட் நஷீட்டினதும் அவரின் குடும்பத்தினரதும் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ கரிசனை கொண்டுள்ளார் என பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
மொஹமட் நஷீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட் ஹஸனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியதாகவும் அதற்கு ஜனாதிபதி வாஹிட் ஹஸன் சம்மதித்தாகவும் பந்துல ஜயகேர கூறினார்.
Labels:
உலகம்