
பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, கடந்த மாதம் 22ம் திகதி, ஜனாதிபதித் தேர்தல் நடந்தது.
இத்தேர்தலில், சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலன்ட் போட்டியிட்டார்.
முதல் கட்ட தேர்தலில் வேட்பாளராக 10 பேர் களத்தில் இருந்தனர். முதல் கட்ட தேர்தலில், 50 சதவீத வாக்குகள் யாருக்கும் கிடைக்காத நிலையில், நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சர்கோசியும், பிராங்காய்ஸ் ஹோலன்டும் களத்தில் இருந்தனர். பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்பின்மை, வரி விதிப்பு, ஓய்வூதியம் குறைப்பு மற்றும் மறுப்பு உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் ஹோலன்ட் பிரசாரம் செய்தார்.
"மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும்´ என, முன்னாள் ஜனாதிபதி சர்கோசி உறுதியளித்தார்.
கடந்த தேர்தலின்போது சர்கோசி, லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியிடமிருந்து 353 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நிதி பெற்றதாகக் கூறப்படுகிறது. இதை லிபியாவின் முன்னாள் அமைச்சர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரண்டாவது கட்ட தேர்தல் நடக்கும் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், சர்கோசிக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது. முதல் கட்ட தேர்தலில் இவர் ஹோலன்டை விட பின்தங்கியிருந்தார் என்பதால், இரண்டாவது கட்ட தேர்தல் ஹோலன்டுக்கு மேலும் வெற்றி வாய்ப்பை அதிகரித்தது.
பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த தேர்தல் நேற்று நடந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஹோலன்டா 52 சதவீத வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹோலன்டா வெற்றியை அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர். கடந்த 1995ம் ஆண்டிற்கு பின்னர் சோசலிஸ்ட் கட்சி சார்பில் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை ஹோலன்டா பெற்றுள்ளார். சர்கோசியின் தோல்வி, ஐரோப்பிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.